மருந்தகங்களிலும் மருந்து பொருட்கள் இன்மையால் நோயாளிகளின் உயிர்களுக்கு ஆபத்து!

தொற்றா நோய்கள் உட்பட பல்வேறு நோய்களுக்கான மருந்து வகைகளுக்குகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், நாட்டில் நோயாளிகளின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக கங்கந்த தெரிவித்தார்.

தனியார் மருந்தக வாகனங்கள் மற்றும் மருந்து விநியோக நிறுவன வாகனங்களையும் அத்தியவசிய சேவையாக கருதி எரிபொருளை ‍உடனடியாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“தனியார் மருந்தகங்களில் கடுமையான மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. மருந்து வகைகள் இருக்கின்றனவா என ஒரு நாளைக்கு சுமார் 300 முதல் 350 தொலைப்பேசி அழைப்புகள் வருகின்றன.

வைத்தியசாலைகளில் மருந்து வகைகள் இல்லாததால், பலரும் தனியார் மருந்தகங்களுக்கு வருகின்றனர். அவர்கள் கேட்கும் மருந்துகளை மிகவும் சிரமத்திற்கு மத்தியிலேயே எடுத்துக்கொடுக்கிறோம். அவ்வாறான மருந்து வகைகளின் விலைகள் அதிகமாக இருக்கும்.

புற்றுநோயாளிகளுக்கு மருந்துகள் இல்லை. இளைப்பு உள்ளவர்களுக்கான மருந்துகள் எதுவும் இல்லை. அறுவை சிகிச்சை செய்ததன் பின்னர் நோயாளிக்கு வழங்கப்படும் வலி நிவாரணிகள் இல்லை.

சிறுநீர் கழிப்பதில் சிரமம் உள்ள நோயாளிகளுக்கு கொடுக்க மருந்து இல்லை. மூக்கடைப்புக்கு கொடுக்கப்படும் மருந்துகளும் (ட்ரொப்ஸ்) இல்லை.

மேலும், காய்ச்சல் அதிகமாக இருக்கும் போது சிறு குழந்தைக்கு தடுப்பூசிகளும் இல்லை. இன்புளுவன்சா வைரஸ் நோயாளிக்கு அளிக்கப்படும் மருந்துகள். நோயாளியின் மூக்கு வழியாக திரவ உணவை அனுப்புவதற்கு குழாய்கள் இல்லை. ஒரு நோயாளிக்கு சிறுநீர் கழிக்க பயன்படுத்தப்படும் வடிகுழாய் இல்லை.

அத்துடன் பல்வேறு மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஆகவே, அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் இது குறித்து உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்.

தனியார் மருந்தகங்கள் மற்றும் மருந்துகளை விநியோகிக்கும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு தேவையான டீசல் மற்றும் பெற்றோலை வழங்குமாறு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

தனியார் மருந்தகங்க உரிமையாளர்களுக்கும், மருந்துகளை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கும் எரிபொருள் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் நோயாளிகளின் உயிருக்கு மேலும் ஆபத்து ஏற்படும் என்றார்.