கா.பொ.த. சாதாரணதர விடைத்தாள் திருத்தும் பணிகள் இடைநிறுத்தம்!

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கா.பொ.த. சாதாரணதர பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் எல்.எம்.டி. தர்மசேன தெரிவிக்கையில்,

எரிபொருள் நெருக்கடி நிலைமை காரணமாக க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. எனினும் முதற் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

குறித்த பரீட்சைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நடைபெற உள்ளன. க.பொ.த உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன.

அதற்கமைய 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் இரு வாரங்களுக்குள் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.