மன்னாரில் கடும் போராட்டத்திற்கு பின் சுகாதார பணிபாளர்களுக்கு எரிபொருள் விநியோகம் !

மன்னாரில் சுகாதார பணிப்பாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டதிற்கு அமைவாக எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் ஆகியோரின் தலையீட்டினாலேயே மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணி மனையின் கீழ் பணிபுரியும் சுகாதார ஊழியர்களுக்கு இவ்வாறு எரிபொருள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் பிரச்சினை உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமது அத்தியாவசிய தேவைகளுக்கு எரிபொருள் வழங்க கோரி மன்னாரில் நேற்று(1) சுகாதார பணிப்பாளர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றையும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளித்திருந்தனர்.

இந்நிலையில், சுகாதார ஊழியர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இன்று(2) காலை தொடக்கம் விசேட ஏற்பாட்டின் கீழ் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார ஊழியர்களுக்கு பதிவுகளின் அடிப்படையில் மன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்புநிலையத்தில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.