குளவிக் கொட்டுக்கு இலக்காணவர் சிகிச்சை பலனின்றி பலி!

பொகவந்தலாவ மேல் பிரிவு தோட்ட பகுதியில் உள்ள 17ம் இலக்க வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்றவர்கள் மீது குளவி கொட்டியதில், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூன்று பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (01) மாலை வேலையில் இடம் பெற்றது.

17ம் இலக்க வனப்பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காக ஒரு குழுவினர் சென்றிருந்த சமயத்தில், மரத்திலிருந்த குளவிக்கூட்டில் பருந்து வந்து மோதியுள்ளது. குளவி கலைந்து தாக்கியதில், பாதிக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

பொகவந்தலாவ கீழ் பிரிவு தோட்டத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சிக்கன் பத்மநாதன் (50) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் பொகவந்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு காயங்களுக்கு உள்ளான மற்றைய மூன்று பேரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.