குழந்தையுடன் சென்ற தாயை நடு வீதியில் வெட்டிக்கொன்ற மர்ம நபர்கள்!

தனது குழந்தையுடன் வீதியில் சென்று கொண்டிருந்த தாய் ஒருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பொல்பிதிகம கொலம்பஎல பிரதேசத்தில் நேற்று (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,

குறித்த தாய் வைத்தியசாலை ஒன்றுக்குச் சென்று விட்டு தனது சிறிய வயது குழந்தையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே அவர் கூரிய ஆயுத்ததால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் 35 வயதான தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், அவர் கொலை செய்யப்பட்டுக் கீழே கிடந்த நிலையில், அவரது குழந்தை அருகில் காணப்பட்டதாகவும் , எனினும் குழந்தைக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த தாயின் சடலம் பொல்பித்திகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கொலையை செய்தார் எனக் கூறப்படும் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரை கைது செய்ய பொல்பித்திகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.