வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!

தற்போது நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களுக்கமு QR முறைமையின் அடிப்படையில் வாராந்த பெற்றோல் மற்றும் டீசல் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி வாரத்திற்கு முச்சக்கரவண்டிக்கு 5 லீற்றரும், சிற்றூர்ந்துகளுக்க 20 லீற்றரும், பாரவூர்திகளுக்கு 50 லீற்றரும் பெற்றோல் மற்றும் டீசல் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உந்துருளிக்கு 4 லீற்றர் பெற்றோலும், பேருந்துக்கு 40 லீற்றர் டீசலும் வாரத்திற்கு ஒதுக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேசிய எரிபொருள் பாஸ் அமைப்பு தொடர்பான ட்விட்டர் செய்தி மூலம் மாற்று பதிவு முறையை அவர் வெளிப்படுத்தினார்.

அனைத்து முச்சக்கர வண்டி பாவனையாளர்களும் தமது வாகனங்களை அந்தந்தப் பகுதி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து 1 எரிபொருள் நிரப்பு நிலையத்தை ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து மட்டுமே எரிபொருளைப் பெற அனுமதிக்கப்படும்.

சேஸ் எண்ணுடன் பதிவு செய்ய முடியாத வாகனப் பயனர்கள் ஜூலை 29 வெள்ளிக்கிழமை முதல் தங்கள் வருவாய் உரிமத்துடன் பதிவு செய்யலாம்.

49சிசி பைக்குகளைப் பயன்படுத்துபவர்கள் தங்களது உரிமங்களைப் பெறுவதற்கும், தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கு பதிவு செய்வதற்கும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும்.

தோட்டக் கருவிகள், ஜெனரேட்டர்கள் மற்றும் எரிபொருள் தேவைப்படும் ஏனைய உபகரணங்களைப் பயன்படுத்துபவர்கள் தங்களது வாராந்த எரிபொருள் தேவைகளுடன் அந்தந்த பிரதேச செயலகங்களில் தமது தேவைகளைப் பதிவு செய்து தேவையைப் பெறுவதற்கு 1 எரிபொருள் நிலையத்தை பரிந்துரைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.