யாழ். எரிபொருள் நிலையத்தில் பெண்களுக்கு தனி வரிசை அமுல்படுத்திய அரச அதிபர்!

யாழ். மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிலையங்களில் பெண்களுக்கு தனி வரிசை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்றையதினம் மாவட்ட செயலகத்தில் எரிபொருள் விநியோகம் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது யாழில் அந்தந்த பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கு மக்களை செல்ல கோரிக்கை விடுக்கப்பட்டது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெண்கள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என 3 வரிசைகளில் எரிபொருள் வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணிபுரிபவர்களின் மோட்டார் சைக்கிள்கள், வாகனங்களை மாத்திரமே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிறுத்த அனுமதிக்கப்படும்.

ஏனையவர்களின் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் பொலிசாரால் அகற்றப்படும்.

சுற்றுலா பயணிகள், வெளிநாடுகளில் இருந்து வந்து நாடு திரும்பவுள்ளவர்களிற்கான எரிபொருள் விநியோகம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர்கள் ஊடாக இலங்கை போக்குவரத்து சபையில் எரிபொருளை பெற்றுக்கொள்ளலாம்.