யாழில் எரிபொருளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ந மோட்டார் சைக்கிள் இன்ஜினுள் மண்ணை கொட்டிய விஷமிகள்!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் விடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் இயந்திரத்திற்குள் விசமிகள் மண்ணை அள்ளி கொட்டியுள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்.நகரின் மத்தியில் அமைந்திருந்த எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

யாழ்.நகர் மத்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் மோட்டார் சைக்கிள்களை அதன் உரிமையாளர்கள் வரிசையில் அடுக்கி வைத்துள்ளார்.

அவ்வாறு இளைஞர் ஒருவரும் தனது பெறுமதி மிக்க நவீன ரக மோட்டார் சைக்கிளை எரிபொருளுக்கான வரிசையில் நிறுத்தி விட்டு இரவு வீடு சென்றுள்ளார். மறுநாள் காலை எரிபொருள் விநியோகிக்கும் போது,

வரிசையில் நின்று தனது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளை நிரப்பியுள்ளார். எரிபொருளை நிரப்பிய பின்னர் மோட்டார் சைக்கிளை இயக்கி ஓடியபோது அதன் இயந்திர சத்தம் மாற்றம் அடைந்து வித்தியாசத்தை உணர்ந்துள்ளார்.

அதனை அடுத்து அவர் தனது மோட்டார் சைக்கிளை திருத்தகத்திற்கு கொண்டு சென்று சோதனை செய்த போதே, மோட்டார் சைக்கிளின் ஓயில் டேங்கினுள் விஷமிகள் மண்ணை அள்ளி போட்டு இருந்தமை தெரிய வந்தது.

ஓயில் டேங்கினுள் மண்ணை போட்டமையால் மோட்டார் சைக்கிளின் இயந்திரத்தின் உட்பாகங்கள் பழுதடைந்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடி காலத்தில் , மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்களுக்கு தட்டுப்பாடு நிலவி

அவற்றின் விலைகள் உச்சத்தை தொட்டுள்ள நிலையில் இளைஞனின் மோட்டார் சைக்கிளை மீள திருத்தி எடுப்பதற்கு பெருமளவான பணம் செலவழியும் என மோட்டார் சைக்கிள் திருத்துநர் தெரிவித்தார்.