இலங்கைக்கு திடீரென மிகபெரும் ஆப்பு வைத்த சீனா!

சீன உர நிறுவனமான சீவின் பயோடெக் கரிம உர ஏற்றுமதிக்காக செலுத்திய பணத்தை மீள வழங்கவோ அல்லது நியமிக்கப்பட்ட கரிம உரத்திற்கு பதிலாக இரசாயன உரங்களை பயன்படுத்தவோ மறுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கரிம உரத்தை கொள்வனவு செய்யுமாறு சீன நிறுவனம் வலியுறுத்தி வருவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

உர ஏற்றுமதி தொடர்பில் விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையிலான குழு சீன நிறுவனத்துடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

“சீன நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளப்பெறுவது அல்லது செலுத்தப்பட்ட தொகையை அனுமதிக்க இரசாயன உரத்தைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை நான் ஆராய்ந்துள்ளேன்.

ஆனால், இரண்டு கோரிக்கைகளுக்கும் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. கரிம உரத்தை முதலில் ஆர்டர் செய்தபடியே பெற வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

பணம், உரம் இரண்டையும் இழக்கும் அபாயம் உள்ளது,” என்றார். இலங்கையில் கரிம உரங்களுக்கான தரநிலைகள் இல்லை என தெரிவித்த அமைச்சர், கரிம உரங்களுக்கு தேவையான தரங்களை தயாரிக்குமாறு இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

“இலங்கையின் தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைகள் (NPQS) நிர்ணயித்த தரங்களுக்கு இணையாக கரிம உரங்களை வழங்க முடியாது என்று சீன நிறுவனம் கூறியது,” என்று அவர் கூறினார்.

மேற்படி ஏற்றுமதி தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதாகவும், மேலதிக நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க நீதிமன்ற வழக்கின் தீர்ப்புக்காக அமைச்சு காத்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.