மதுபானக்கடையில் ஓட்டைபோட்டு மதுபானங்களை திருடிய சந்தேக நபர்கள்!

ஓசூரை அடுத்த பாகலூர் அருகே உள்ள முக்குலப்பள்ளி கிராமத்தில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் பட்டுவாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசப்பா (45) மேற்பார்வையாளராகவும், ஓசூர் அருகே உள்ள பைகேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமாரன் என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர்.

விற்பனையாளர் செல்வகுமாரன், 2 லட்சத்து 61 ஆயிரத்து 720 ரூபாய் ரொக்கத்தை கல் பெட்டியில் வைத்துவிட்டு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில் நள்ளிரவில் அங்கு சென்ற மர்ம நபர்கள் கடையின் பின்பக்க சுவரில் துளை போட்டு உள்ளே புகுந்தனர். பின்னர் மதுக்கடையில் இருந்த கல் பெட்டியில் இருந்த ரூ.2 லட்சத்து 61 ஆயிரத்து 720 பணம் மற்றும் ரூ.29 ஆயிரத்து 870 மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர்.

வழக்கம்போல் காலை அரசு மதுபானக்கடையை திறந்த கடைக்காரர் மற்றும் மேற்பார்வையாளர் கல்பெட்டியில் இருந்த பணம் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து கண்காணிப்பாளர் வெங்கடேசப்பா பாகலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த அரசு மதுபானக்கடை ஊருக்கு வெளியே உள்ளதால், அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடப்பதாக கூறப்படுகிறது. இந்த கடையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசு மதுபானக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கத்தின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சத்து 91 ஆயிரத்து 590 என கூறப்படுகிறது.இதுகுறித்து பாகலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.