இலங்கை அணியை போன்று அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றிபெறலாம்! – ஜனாதிபதி

இலங்கை அணி கடந்த கால தோல்விகளை பலமாக பயன்படுத்தி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே, ஒரு நாடாக இலங்கையை வெற்றிபெறச் செய்வது கடினமான காரியமல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒரு அணியாக இணைந்து செயற்பட்டமை இலங்கைக்கு ஆசிய கிண்ணத்தை வெல்வதற்கு உதவியதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஆசியக் கிண்ணம், ஆசிய வலைப்பந்து சம்பியன் மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை இன்று ஆப்கானிஸ்தானை விடவும் சீரழிந்துள்ளது. இந்த சூழ்நிலையிலிருந்து வெளியேற வழி இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள்.

கிரிக்கெட் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த இலங்கை கிரிக்கெட் அணி பின்வாங்காமல் பலத்துடன் அடுத்த கட்டத்திற்கு சென்றது.

அதேபோன்று தோல்வியை வெற்றிக்கான ஆயுதமாக்கினால் நெருக்கடிகளில் இருந்து விரைவாக மீள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.