பாடசாலை பேருந்துகள் இடைநிறுத்தம்!

வாகன உதிரி பாகங்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாடசாலை பஸ்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கொடக்காவெல டிப்போ ஊடாக பயணித்த 5 பாடசாலை பஸ்கள் போக்குவரத்து சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், பல்வேறு டிப்போக்களுக்கு சொந்தமான பஸ்களும் பொது போக்குவரத்து சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொடக்காவெல டிப்போவிற்கு சொந்தமான மேற்படி 5 பஸ்கள் எஞ்சின் உதிரி பாகங்கள் மற்றும் கியர் பாக்ஸ் உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் சில பஸ் உதிரிபாகங்கள் திருத்தப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

பஸ்களின் டயர்கள், ட்யூப்கள், பேட்டரிகளை கொண்டுவந்து, பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டுள்ள பஸ்களுக்கு சேவையில் ஈடுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.