வாய்த்தர்க்கம் முற்றியதால் ஏற்பட்ட விபரீதம் – முன்னாள் இராணுவ வீரர் படுகொலை!

புத்தளம் குருநாகல் வீதி வில்லுமதி பிரதேசத்தில் ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவ சிப்பாய் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கானவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருக்கும் மற்றுமொருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த தகராறில் கொல்லப்பட்ட நபருக்கு 43 வயது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குட்செட் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸாரும் சட்ட வைத்திய பொலிஸாரும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.