யாழ் இளைஞர்களின் பொக்கட்டுக்குள் சொக்லேட் வடிவில் போதைப்பொருள் – வெளியான ரிப்போட் !

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 183 பேர் மாத்திரமே கொடிய ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களில் 155 பேர் சிறையில் இருந்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 28 பேர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், நேற்று மட்டும் யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருளுடன் பலர் பிடிபட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்விப் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்த ஒருவர் மற்றும் அவற்றை வாங்கிய இருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபரிடமிருந்து 3 கிலோ 100 கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வாங்கச் சென்ற இருவர் 21 மற்றும் 30 வயதுடையவர்கள் எனவும், விற்பனையாளருக்கு 41 வயது எனவும் தெரியவந்துள்ளது.

இது தவிர யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் கடையை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 5 கிராம் 110 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இதன் மூலம் யாழ்.மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவர்களின் பைகளில் போதைப்பொருள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.