யாழ் – கொழும்பு சேவை; நாளை முதல் அமுலாகவுள்ள நடவடிக்கை!

யாழ்ப்பாணம் – கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களும் நாளை முதல் சோதனைக்கு உட்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகமலையில் இந்த சோதனை நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் உறுப்பினரும் வடமாகாண தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான சி.சிவபரன் தெரிவித்தார்.

அதன்படி, நாளை முதல் அனைத்து பேருந்துகளின் வழித்தட அனுமதி மற்றும் ஓட்டுனர் உரிமம் முகமாலையில் சோதனை செய்யப்படும்.

முகமாலையில் அனுமதிப்பத்திரங்கள் பரிசோதிக்கப்படும் எனவும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் அனைத்து பஸ்களும் புளியங்குள பகுதியில் 20 நிமிடம் நிறுத்தப்பட்டு மீண்டும் பயணிக்க அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து வவுனியாவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.