இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்: இரு சிறுமிகள் சடலமாக மீட்பு !

ஹம்பாந்தோட்டை சூரியவெவ மகாவலிகதர வாவியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மேலும் இரு சிறுமிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

18 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகளின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்த இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த படகில் 8 பேர் பயணித்துள்ளனர், அதில் 5 பேர் காப்பாற்றப்பட்டனர். நேற்று மதியம் 10 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் ஏனைய மூவரும் காணவில்லை.

மற்றைய இரு சிறுமிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை அவர்களது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதரன செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்தில் சிக்கியவர்கள் குருநாகல் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், உறவினர் வீட்டில் இருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் சிறிய படகில் 08 பேர் பயணித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். வாவியின் நடுவே படகு கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.