மட்டக்களப்பில் ஒருதலைக் காதல் தற்கொலையில் முடிந்தது !

இறுதியாக பதிவேற்றிய TIK TOK வீடியோ விவகாரமே தற்கொலையை துரிதப்படுத்தியிருக்கிறது.
விதானையார் வீதி, மாவடிவேம்பை சேர்ந்த யோகநாதன் சந்திரகுமார் (22) என்ற இளைஞன் சித்தாண்டியை சேர்ந்த யுவதி ஒருவரை விரும்பியிருந்த போதும், அதனை குறித்த யுவதி ஏற்கவில்லை.

பல மாதங்களாக கனியாத காதலை கனியவைக்க கடந்த 09ஆம் திகதி இரவு வேளையில் குறித்த யுவதியினதும் இவரதும் புகைப்படத்தை இணைத்து TIK TOK வீடியோ ஒன்றினை பதிவேற்றம் செய்த இவருக்கு, யுவதியின் தரப்பிலிருந்து கண்டணங்கள் வந்ததால் மன உளைச்சலுக்குள்ளான இவர் வீடியோவை அழித்து விட்டு பந்துக்காய் எனும் நச்சுக்காயினை உட்கொண்டிருக்கிறார்.

தொடரான வாந்தியுடன் மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (10) காலை 06.30 மணியளவில் மரணித்துள்ளார்.

சந்திவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளின் பேரில், பிரதேச மரண விசாரணை அதிகாரி MSM.நஸீர் மரண விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை பெற்றோரிடம் (10/11) ஒப்படைத்தார்.