யாழில் கோவிலை உடைத்து சமையல் பாத்திரங்களை திருடிய சந்தேக நபரை கைது செய்த பொலிஸார்!

யாழ்.துன்னாலை தெற்கு பூதேஸ்வரன் சிவன் கோவிலில் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து திருடப்பட்ட பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இரண்டு வாரங்களுக்கு முன், மேற்படி கோவிலின் கதவு உடைக்கப்பட்டு, சமையல் பாத்திரங்கள், மின்சாதனங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பாக யாழ்.நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த பொலிஸாருக்கு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (14) கிடைக்கப்பெற்ற

இரகசியத் தகவலின் பேரில் துன்னாலையைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவரைக் கைது செய்ததுடன், அவரிடமிருந்து திருடப்பட்ட சமையல் பாத்திரங்கள் மற்றும் மின்சாதனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.