அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேற , நடமாட தனுஷ்கவுக்குத் தடை!

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கிற்கு சிட்னி நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.

கடுமையான நிபந்தனைகளுடன் தனுஷ்க குணதிலக்கிற்கு சிட்னி நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.

இதன்படி தனுஷ்க குணதிலக்கிற்கு 150,000 அவுஸ்திரேலிய டொலர் பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர் மீதான வழக்கு விசாரணை ஜனவரி 12ஆம் தேதி நடைபெற உள்ளதால் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தனுஷ்கவின் கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது. தினமும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்கா தனது அனுமதியின்றி தன்னுடன் உடலுறவு கொண்டதாக அவுஸ்திரேலிய பெண் ஒருவர் முறைப்பாடு செய்ததையடுத்து தனுஷ்காவை கடந்த 6ஆம் திகதி அவுஸ்திரேலிய பொலிஸார் கைது செய்தனர்.

கடந்த 7ஆம் திகதி, சிட்னியின் டொனிங் சென்டர் நீதிமன்ற நீதிபதி ரொபர்ட் வில்லியம்ஸ், கைது செய்யப்பட்ட தனுஷ்காவுக்கு பிணை வழங்க மறுத்த நிலையில், கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கிற்கு பிணை வழங்க அவரது சட்டத்தரணிகள் இரண்டாவது முயற்சியை மேற்கொண்டனர்.

இந்நிலையில், தனுஷ்க குணதிலக்கிற்கு சிட்னி டொனிங் சென்டரில் உள்ள உள்ளூர் நீதிபதி இன்று பிணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.