மகளை மீட்டுத்தாருங்கள்; தாய் ஒருவரின் கண்ணீர் கோரிக்கை!

ஓமானில் வீட்டு பணிப்பெண்ணாக சென்று சித்திரவதைக்கு உள்ளாகும் தனது மகள் உட்பட 90 பெண்களை மீட்டுத் தருமாறு ஓட்டமாவடியைச் சேர்ந்த தாய் ஒருவர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு, ஓட்டமாவடி பாலாநகரைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தாயான 51 வயதுடைய மொஹமட் இஸ்மாயில் சித்திக்னிசா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு ஓட்டமாவடி பாலாநகரைச் சேர்ந்த 2 வயது குழந்தையின் தாயான 22 வயதுடைய மொஹமட் அஸீம் பாத்திமா ஹமிதியா என்பவரே இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளார்.

தனது மகளை இலங்கையில் இருந்து துபாய்க்கு வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்றதாக ஏஜென்சி பொய் கூறி, பின்னர் ஓமானுக்கு அழைத்துச் சென்று விற்றதாகவும் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 9 மாதங்களாக மட்டக்களப்பு வேலை வாய்ப்புப் பணியகம், 16 தரம் வேலைவாய்ப்புப் பணியகம், மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறுவர் நன்னடத்தை பிரிவு என்பன அவரது மகளை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்த போதிலும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

தன்னுடன் 90 பேர் அங்கு சித்ரவதை செய்வதாக தனது மகள் வீடியோ அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, 9 மற்றும் 10 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளின் தாயான பர்திமா சபீரா கடந்த மூன்று மாதங்களாக அப்பகுதியுடன் எவ்வித தொடர்பும் கொண்டிருக்கவில்லை எனவும், எனவே அவரை மீட்டுத்தருமாறும் அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.