முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர் கடந்த 25ஆம் திகதி கிளிநொச்சியில் உள்ள நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்காக முள்ளியவளை மாஞ்சோலைப் பகுதியிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்றுள்ளார்.
குறித்த சிறுமி முல்லைத்தீவில் இருந்து புதுக்குடியிருப்புக்கு இனந்தெரியாத நபர்களின் வாகனத்தில் பயணித்துள்ளார்.
புதுக்குடியிருப்பில் இருந்து கிளிநொச்சிக்கு செல்வதாகக் கூறிய இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, அப்பகுதியிலுள்ள வாடகை வீடொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி இளைஞனால் வன்புணர்வுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னர், சிறுமியை வீதியில் விட்டுச் சென்ற போது, வேறொருவர் தூக்கிச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இந்நிலையில், இரவு முழுவதும் வீதியில் பஸ் நிலையத்தில் நின்றிருந்த சிறுமி, சனிக்கிழமை காலை கிளிநொச்சிக்குச் சென்று பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்றுள்ளார்.
இதனையடுத்து சிறுமி கிளிநொச்சி பொலிஸாரால் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றுமொரு இளைஞனை தேடி வருவதாகவும் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.