யாழ்ப்பாணம் பிரதானவீதியில் பரியோவான் கல்லூரிக்கு (Jaffna St Johns College) அருகாமையில் உள்ள சேமக்காலையின் வாயிலுக்கு அருகில் பழைய கட்டுமானம் ஒன்று உள்ளது. ஒவ்வொருமுறை அந்தஇடத்தருகில் செல்லும் போதும், இது என்னவாக இருக்கும் என்ற கேள்வி என்னுள் எழும், அண்மையில் பாக்கியநாதன் அகிலன் அவர்களின் “காலத்தின் விளிம்பில்” நூலை படித்தபொது அதற்கான ஆச்சரியமான விடை கிடைத்தது.
இந்த கட்டுமானம் 2ஆம் உலகமகாயுத்த காலத்துக்கு உரியது எனவும், விமான குண்டுவீச்சு இடம்பெற்று கொண்டிருந்த காலகட்டத்தில் விமானங்கள் குண்டுவீச வருகின்ற பொது, அதை முன்கூட்டியே மக்களுக்கு அறியத்தர ஊதப்படும் “சைரன்” இந்த கட்டுமானதிலேயே பொருத்தி இருந்ததாகவும், காலத்தின் விளிம்பில் நூல் மூலம் அறியமுடிகிறது.
வீதி அகலிப்பு என்ற பெயரில் மிகப்பழமையான மரங்களும் கட்டடங்களும் காணாமல் போக செய்யப்பட்டது, இந்த கட்டுமானம் தப்பிப்பிழைத்துள்ளது, ஆனாலும் காலப்போக்கில் மழை வெய்யில் என்பவற்றில் அழிந்து போக வாய்ப்புள்ளது. இந்த நினைவுச்சின்னத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. உரியவர்கள் கவனத்தில் கொள்வார்களா?
குலசிங்கம் வசீகரன்