நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வாய்ப்பு தேடி ஓமன் நாட்டிற்குச் சென்ற இலங்கைப் பெண்கள் தொழில் வாய்ப்புகள் இன்றி சங்கிலியால் பிணைக்கப்பட்டு தவறான தொழிலுக்கு தள்ளப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஓமன் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு நாடு திரும்பிய இரண்டு பெண்கள் இவ்வாறு கூறியுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல பெண்கள் கை கால் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
வவுனியா ஆச்சிபுரத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவர் கடந்த ஜூன் மாதம் டுபாயில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி ஓமன் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு அங்கு வேலை எதுவும் வழங்கப்படாததால் அவர் நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மேலும், வவுனியா சிதம்பரபுரத்தைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவர் கடந்த செப்டெம்பர் மாதம் ஓமன் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்தும் வேலை வழங்கப்படாமல் நாடு திரும்பியுள்ளார். இவ்வாறு நாடு திரும்பிய பெண்கள் மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளனர்.