சீரற்ற காலநிலையின் காரணமாக மட்டக்களப்பில் பெண் ஒருவர் பலி !

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பகேணி 40 கிராமத்தில் சீரற்ற காலநிலை காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பெரியகல்லாறு பிரதான வீதியைச் சேர்ந்த நாகமணி பூமலர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச கிராம சேவகர் தெரிவித்தார்.

நேற்று மாலை பெரியகல்லாறில் இருந்து 40வது கிராமத்திற்கு பஸ்சில் இருந்து இறங்கி மயான வீதியில் நடந்து சென்ற போது கீழே விழுந்து இறந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இன்று காலை அப்பகுதியை கடந்து சென்ற மக்கள் சடலத்தை பார்த்து பிரதேச கிராம சேவகருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நிலவும் குளிர் மற்றும் மழையுடனான காலநிலை காரணமாக குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லாவெளி பொலிஸார் அப்பகுதிக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.