தென் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை

தென் வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தம் காரணமாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் .

அத்துடன் மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.