தமிழர் தரப்புடன் ரணில் மீண்டும் பேச்சு : முக்கிய பிரச்சினைகள் ஆராய்வு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆளும் தரப்பினருக்கும் தமிழ் தலைமைகளுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விடயங்கள் குறித்து தொடர்ந்து பேசுவதற்காகத் தமிழர் தரப்பை மீண்டும் பேச்சுக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்திருந்த நிலையில் இப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இதன்போது கடந்த சர்வகட்சி மாநாட்டில் பேசப்பட்ட தமிழ் மக்கள் சார்ந்த விடயங்கள் சம்பந்தமாக மீளவும் கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக பேச்சுவார்த்தைகளை தீவிரமாக முன்னெடுப்பதற்கு முன்னதாக அரசியல் கைதிகளின் விடுதலை, மற்றும் காணி அபகரிப்புக்களை நிறுத்துதல் உள்ளிட்ட விடயங்களை முன்னெடுத்தல் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்போது 5 தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்வரும் 2 ஆம் திகதி பாதுகாப்புச் சபைக் கூட்டம் இடம்பெறும் போது அதில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் தொடர்பில் ஆராயப்பட்டு அவற்றை விடுவிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அரசாங்கத் தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 5 ஆம் திகதி தமிழ் கட்சித் தலைவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வுக்கான கலந்துரையாடல் தொடர்பில் நிகழ்ச்சி நிரலை தீர்மானிப்பதற்கும் இதன்போது அரசாங்கத் தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் ஜனவரி மாதம் 10, 11,12,13, ஆம் திகதிகளில் தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த சம்பந்தன், அரசியல் கைதிகள் ஐவரை மட்டும் விடுவித்தால் போதாது முழு அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும். முழுமையான காணி விடுவிப்பும் அவசியமாகும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இச் சந்திப்பின் போது அரசாங்கா தரப்பில் ஜனாதிபதியுடன் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்‌ச, அலி சப்ரி, பிரசன்ன ரணதுங்க, டக்ளஸ் தேவானந்தா மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.