மன்னார் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி – காவல்துறை சாரதி கைது!

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பேசாலை காவல்நிலைய வாகன சாரதியை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று மாலை உத்தரவிட்டார்.

உயிரிழந்தவர் மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ஆனந்த் கன்பியூசியஸ் விஜய்-(32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மன்னாரில் இருந்து பேசாலை நோக்கி பயணித்த காவல்துறை டிபென்டர் ரக வாகனமும், பேசாலை வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த இளம் குடும்பஸ்தர் ஒருவரின் உந்துருளியும் மோதி விபத்துக்கு உள்ளாகின.

குறித்த விபத்தின் போதுஉந்துருளியில் பயணித்த இளைஞர் வீதியில் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்த நிலையில், வீதியால் சென்றவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு நோயாளர் காவு வாகனம் மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது