யாழில் அரச அலுவலக அதிகாரியாக பணிப்புரிந்த இளைஞர் அதிகமான போதைப்பொருளை ஊசி மூலம் செலுத்தியதால் உயிரிழப்பு !

யாழில் அதிகளவு போதை ஊசி போட்டு இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் திணைக்களம் ஒன்றில் அலுவலக உதவியாளராக கடமையாற்றிய கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் திடீரென மயங்கி விழுந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது குறித்த இளைஞன் போதைப்பொருளை உடலில் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞனுடன் இருந்த மூவர் போதை ஊசி போட்டு விட்டு மீதி இருந்த அனைத்து மருந்துகளையும் அந்த இளைஞருக்கு ஏற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி என்.பிரேம்குமார் மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, போதைப்பொருள் ஊசி மூலம் யாழ்ப்பாணத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்கள் 30 வயதுக்கும் குறைவானவர்கள் என வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.