சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்து பெண்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கத் தீர்மானம்!

சுற்றுலா விசாவில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்து பெண்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

அவர்களுக்கு எதிராக பணியக சட்ட விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

.

இதேவேளை, ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் உள்ள சுரக்ஷா ஹோட்டலில் தங்கியுள்ள இலங்கைப் பெண்களை நாடு திரும்பும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24ஆம் திகதி 8 பெண்கள் அடங்கிய குழுவொன்று இலங்கை வந்ததாகவும், மேலும் 6 பெண்கள் இன்று (02) இலங்கை வரவுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

தூதரகத்தால் பணியகத்தில் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்படாத சுற்றுலா விசாக்களுடன் ஓமனுக்கு வேலைக்குச் சென்ற 18 பேர் சிக்கித் தவிப்பதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பணியிடத்தில் இருந்து தலைமறைவானதால் அவர்களது பெயர்களும் தொழிலாளர் அமைச்சகத்தால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

எனவே, அவர்களை அந்தந்த முதலாளிகளின் அனுமதியுடன் இலங்கைக்கு அழைத்துவர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருக்கும் குழுவாக இருப்பதால், அவர்களது குடும்பத்தினர் விமான டிக்கெட்டுகளை வழங்க வேண்டும் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.