உள்ளூராட்சி மன்ற தேர்தல் – வேட்புமனு கோரல் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி 21ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும்.

எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை பிணைமுறி கொடுப்பனவுகளை செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை கோருவதற்கான அறிவித்தல் மாவட்ட செயலாளர்களால் இன்று (4) வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பில் வேட்புமனுக்களை ஏற்கும் தேதி, இடம், பத்திரங்கள், வேட்பாளர்கள், பெண்கள் பிரதிநிதித்துவம் போன்றவை அடங்கும்.

மார்ச் 20ஆம் திகதிக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கான உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்றும், மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.