மட்டக்களப்பில் மைதானத்திற்கு தமிழ் பெயரை சூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் மக்கள் !

மட்டக்களப்பில் தமிழ் பிரதேசத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்திற்கு, தமிழ் பெயர் சூட்டுவதற்கு முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோறளைப்பற்று பிரதேச சபையின் பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்னாள் தவிசாளர் கனகரெத்தினத்தின் பெயர் பொறிக்கப்பட்ட பெயர் பலகை இடுவதற்கு தவிசாளர் சோபா ஜெயரஞ்சித்தினால் இன்று ஞாயிற்றுக் கிழமை (1) முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை கடும் எதிர்ப்பினை தொடர்ந்து கைவிடப்பட்டுள்ளது.

இவ் மைதானத்திற்கு தனி நபர்களது பெயர் எதுவும் வைக்காமல் முன்பு இருந்தமை போல் பொது விளையாட்டு மைதானம் என பெயர் வைக்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

அந்த பகுதியிலுள்ள முஸ்லிம் மக்கள் மைதானத்திற்கு முன்பாக ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்துடன் தவிசாளருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வாழைச்சேனை பொலிசார் வரவழைக்கப்பட்டு கலவரம் ஏற்படாமல் தடுத்தனர்.

பொலிசார் இரு தரப்பினரின் விடயத்தினை விசாரித்ததன் பின்னர், பெயர் பலகை இடுவதை தற்காலிகமாக நிறுத்தி நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் பெயர் பலகையிடுமாறு தவிசாளரிற்கு ஆலோசனை வழங்கினர்.

இந்த விளையாட்டு மைதானம் புதுக்குடியிருப்பு கிராமசேகர் பிரிவிற்குள் வருவதாகவும் பிரதேச சபையில் முன்னாள் தவிசாளரின் பெயர் மைதானத்திற்கு வைக்கப்படவேண்டும் என சபை தீர்மானம் எடுக்கப்பட்டதனால் இன்று அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தவிசாளர் சோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.

இருந்தபோதிலும் சட்ட நடவடிக்கையின் பின்னர் மீண்டும் அதே இடத்தில் குறித்த தவிசாளரின் பெயர் பொறிக்கப்பட்ட பெயர் பலகை இடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கருத்து தெரிவித்தார்.