சிறுநீரக வர்த்தக மோசடி! சந்தேகநபர் தப்பியோட்டம்

கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி தொடர்பான தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

நாட்டில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் போலி ஆவணங்கள் ஊடாக இந்த சட்டவிரோத செயற்பாடு இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறிய குடும்பங்களில் இருந்து சட்டவிரோதமான முறையில் சிறுநீரகத்தை பெற்றுக்கொண்ட வழக்கின் பிரதான சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்ட அவர், நவம்பர் 27ஆம் திகதி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக விமான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.

சந்தேக நபரை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொரளை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இந்த சிறுநீரக கடத்தல் இடம்பெற்றுள்ளதாகவும், வைத்தியசாலையில் கடமையாற்றும் மூன்று ஊழியர்கள் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.