யாழில் யுவதியை பலாத்காரம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய அதிர்ச்சி தகவல் !

பருத்தித்துறையில் இளம் யுவதியொருவரை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டிருந்தார். அவருடன் இணைந்து யுவதியை பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக கூறப்பட்ட இரண்டாவது நபர் பொலிஸ் உத்தியோகத்தர் அல்லவென்பது தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் வெளியான செய்திகளின் அடிப்படையில், இரண்டாவது சந்தேகநபரும் பொலிஸ் உத்தியோகத்தர் என கூறப்பட்டிருந்தது.

அத்துடன், பலாத்காரத்திற்கு உட்பட்ட போது, பாதிக்கப்பட்டவர் சிறுமி அல்லவென்பதும், அவர் 18 வயதிற்கு மேற்பட்டவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

ஒரு வருடத்திற்கும் மேலாக யுவதியை மிரட்டி பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள், பருத்தித்துறை பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (3) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

முருங்கன் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பருத்தித்துறை, புலோலி பகுதியை சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

19 வயதான யுவதி திடீரென மயக்கமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், மனஅழுத்தத்தில் காணப்பட்டார். பின்னர், அவர் வைத்தியர்களிடம் தனக்கு நேர்ந்த சம்பவத்தை தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் கடந்த டிசம்பர் 30ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

விசாரணையின் போது, யுவதிக்கும் தனக்கும் காதல் இருப்பதாக பொலிஸ் கான்ஸ்டபிள் தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

காதல் காரணமாக, ஜூலை 2021 இல் ஒரு நாளில், இருவரின் சம்மதத்தின் பேரில், இருவரும் உடலுறவில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.

புகார் அளித்த யுவதி, கான்ஸ்டபிளும் அவரது நண்பரும் ஒன்றாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களைக் காட்டி இருவரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பொலிசில் கூறியுள்ளார்.

பொலிசாரின் விசாரணையில் இரண்டாவது நபர் பொலிஸ் உத்தியோகத்தர் அல்ல என தெரியவந்துள்ளது.

குறிப்பிடப்படும் பலாத்கார சம்பவம் நடந்த போது பாதிக்கப்பட்டவர் சிறுமி அல்ல வென்றும், அவரது 18 வது பிறந்தநாளின் பின்னர் இவை அனைத்தும் நடந்ததாகவும் தெரிய வந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான பொலிஸ் கான்ஸ்டபிளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.