தமிழகத்தில் விஷ பூச்சி கடித்து மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
கொரடாச்சேரி அருகே திட்டணிமுட்டம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 38), இவரது மனைவி வேதநாயகி. இவர்களுக்கு பிறந்த தட்சயா என்ற 3 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது விஷ பூச்சி கடித்ததால் தட்சயா கதறி அழுதார்.
இதையடுத்து குழந்தையை பெற்றோர் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு குழந்தை தட்சயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
இதுகுறித்து, சிறுமியின் தாய் வேதநாயகி, கொரடாச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷ பூச்சி கடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.