போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் காவலில் இருந்து உதவி முகாமையாளர் துப்பாக்கிச் சூட்டில் பலி!

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் (PNB) காவலில் இருந்த நாரஹேன்பிட்டிய தொழிற்பயிற்சி அதிகாரசபையின் (VTA) உதவி முகாமையாளர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாரஹேன்பிட்டி பகுதியில் வைத்து 15 கிராம் ஹெரோயினுடன் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளின் போது வைத்தியசாலையில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதுடன், போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹிக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.