இந்த ஆண்டு 500,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பு!

இந்த ஆண்டு 500,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மலேசியாவுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களால் மலேசியர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படாது என மலேசிய மனிதவள அமைச்சர் வி.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

மலேசியா – பூசிங்கில் நேற்று (15.01.2023) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

15 ஆசிய நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்படுவார்கள் என்றும், உள்ளூர்வாசிகள் ஆர்வம் காட்டாத தோட்டக்கலை, விவசாயம் மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளில் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துறைகளில் வேலை செய்ய உள்ளூர் தொழிலாளர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

எனவே, அந்தத் துறைகள் வெளிநாட்டுத் தொழிலாளர்களையே அதிகம் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இத்துறைகளில் போதிய பணியாளர்கள் இல்லை என்றால், அவற்றின் செயல்பாடுகள் மந்தமாகி, பாரிய இழப்புகளுக்கு வழிவகுக்கும்.

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 700,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

எனவே, பணியாளர்கள் பற்றாக்குறை பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லையெனில், பொருளாதாரம் பாதிக்கப்படும், என்றார்.