உயர்தரப் பரீட்சையின் காரணமாக மின்வெட்டு குறித்து வெளியான தகவல் !

நாட்டில் உயர்தரப் பரீட்சை முடியும் வரை தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று (25-01-2023) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல்வேறு தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இதன் போது, ​​உயர்தரப் பரீட்சை முடியும் வரை தடையில்லா மின்சாரம் வழங்க முடியும் என பல்வேறு தரப்பினரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர் என்றார்.

இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட உடன்படிக்கையில் அனைத்து தரப்பினரும் கைச்சாத்திட்டுள்ளதாக ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

தேர்வின் போது ஏற்படும் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்தும், தடையில்லா மின்சாரம் வழங்க தேவையான நிதி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்றார்.