யாழில் மக்களை அடித்து துன்புறுத்திய நபர் கைது!

யாழில் ,மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்து மக்களை அடித்து கொடுமைப்படுத்திய நபரை குற்றப் தடுப்புப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் அளவெட்டியை சேர்ந்தவர் எனவும் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்து விட்டு அதனை வசூலிப்பதற்காக அவர்களை அடித்து துன்புறுத்தும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் குறித்த தகவல் வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

அது மட்டுமன்றி குறித்த காணொளி உயர்மட்ட பொலிஸாருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் சுன்னாகத்தில் மூன்று நாட்களுக்கு முன்னர் இடம் பெற்ற விபத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த நபர் மருதனாமடம் பகுதியில் உள்ள தோட்டக் காணி ஒன்றினுள் அழைத்தே இவ்வாறு அடித்து துன்புறுத்தியுள்ளார்.முகக்கவசம் அணிந்தவாறு அடித்து துன்புறுத்தும் நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கும்பலுடன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலுள்ள பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

வெளியான காணொளிகள் ஒன்றரை வருடத்திற்கு முன்னர் எடுக்கப்பட்டதாகவும் தற்போது அந்த குழுவிற்குள் ஏற்ப்பட்ட முரண்பாட்டின் காரணமாக குறித்த காணொளி வெயிடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது இது தொடர்பில் மேலும் பல காணொளிகள் வெளியாகியுள்ளன.

வெளியாகிய காணொளியின் அடிப்படையில் அடித்து துன்புறுத்தும் அளவெட்டியை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.