காணி தகராறில் ஏற்பட்ட கைகலப்பில் இருவர் உயிரிழப்பு! 4 பேர் வைத்தியசாலையில் !

திருகோணமலையின் பிரதேசமொன்றில் காணிப்பிரச்சனை காரணமாக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இச்சம்பவம் இன்று (29-01-2023) பிற்பகல் திருகோணமலை – புல்மோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

புல்மோட்டை பம்ஹவுஸ் விவசாயக் காணிக்குள் எல்லைப் பிரச்சினை காரணமாக இரு குழுக்களுக்கிடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மோதலில் புல்மோட்டை-01 பகுதியைச் சேர்ந்த எஸ்.எம்.படூர் (வயது 42) மற்றும் புல்மோட்டை நான்காம் பகுதியைச் சேர்ந்த எம்.எம்.சலீம் (வயது 42) ஆகியோர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் சடலங்கள் புல்மோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, படுகாயமடைந்த நால்வர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் புல்மோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.