வவுனியாவில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் மயங்கி விழுந்த மாணவர்கள் !

வவுனியாவில் மாணவர்கள், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட 31 பேர் திடீரென மயங்கி விழுந்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் இலங்கையின் 75வது சுதந்திர தின விழா இன்று (04.02.2023) காலை நகர சபை மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் அவர்கள் அதிதியாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

அணிவகுப்பில் கலந்துகொண்ட பாடசாலை மாணவர்கள், சிவில் பாதுகாப்புப் படையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அணிவகுப்பு நிறைவடைந்த பின்னர் பிரதான நிகழ்வு மண்டபத்திற்கு முன்பாக உள்ள மைதானத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

குறித்த மாணவர்கள், இராணுவம், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், 28 மாணவர்களும் 3 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் வெயிலின் தாக்கத்தினால் மயங்கி விழுந்தனர்.

உடனடியாக அவர்களை செஞ்சிலுவைச் சங்க தொண்டர்களும், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையும் அழைத்துச் சென்று ஆம்புலன்ஸில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

கடந்த வருடம் மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது வெப்ப தாக்கத்தினால் 13 மாணவர்கள் மற்றும் 5 சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 18 பேர் மயங்கி விழுந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே இனிவரும் சுதந்திர தின நிகழ்வுகளில் அணிவகுப்பு வகுப்பு முடிந்தவுடன் அவ்விடத்தை விட்டு வெளியேற அனுமதிப்பது அல்லது மாற்று வழிகளில் செல்வது நல்லது.