சீனர்களுக்கு விற்கப்படும் இலங்கை பெண்கள் குறித்து வெளியாகிய அதிர்ச்சி தகவல்

தாய்லாந்தில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி இலங்கை பெண்களை சீனர்களுக்கு விற்பனை செய்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது .அவ்வாறு சீனர்களுக்கு விற்கப்பட்ட பெண்கள் தப்பி சென்று தாய்லாந்து பொலிசில் தஞ்சம் அடைந்த நிலையில் நேற்றைய தினம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

ருவான் பத்திரன என்பவரின் மகன் என கூறப்படும் நபரே இவ்வாறு தம்மை விற்பனை செய்ததாக நாட்டை வந்தடைந்த பெண்கள் ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சீனர்களின் தொழிற்சாலைகளில் எங்களை சித்திரவதைக்குட்படுத்தி வேலை செய்ய வைத்தார்கள். வெயிலில் நிற்க வைப்பார்கள். வெயிலில் ஓடச் சொல்லுவார்கள். மின்சாரம் பாய்ச்சினார்கள்.

சுமார் ஒரு மாத காலம் உணவின்றி அறையில் அடைத்து வைத்தார்கள். இலங்கைக்கு அனுப்புவதற்கு 5000 டொலர்களை செலுத்துமாறு கூறியதாகவும் யுவதிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் அம்பலாந்தோட்டை உள்ளுராட்சி மன்ற வேட்பாளர் அனுர சேனாரத்னவின் அலுவலகத்தில் இருந்து ருவான் பத்திரன என்ற மொழிபெயர்ப்பாளர் பணத்திற்கு பெண்களை கடத்துவதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட சுற்றிவளைப்பு குழுவினர் ஹம்பாந்தோட்டை நீதிமன்றில் கடந்த 6ஆம் திகதி இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ருவன் பத்திரன என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். தற்போது வீட்டில் இருந்து காணாமல் போயுள்ள பிரதான கடத்தல்காரன் என கூறப்படும் அனுர சேனாரத்னவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த கடத்தல் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடத்தல் காரர்களிடம் சிக்கி தாய்லாந்தில் அவதிப்பட்டு வந்த இருபது வயதுடைய நான்கு யுவதிகள் மற்றும் சிறுமிகள் நேற்று காலை இலங்கை வந்தடைந்தனர்.

அவர்கள் அம்பலந்தொட்ட பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களில் மூவர் ஒரே குடும்பத்தின் உறவினர்கள் என தெரியவந்துள்ளது.