யாழ். போதனா வைத்தியசாலையில் அப்பாவை பார்க்க விடாததால் வாள்வெட்டு சம்பவத்தை மேற்கொண்ட மகன் !

யாழ்.போதனா மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நோயாளர் பார்வை நேரம் முடிந்த பின் தந்தையை பார்வையிட அனுமதிக்கவில்லை என்ற காரணத்துக்காகவே இந்த வனமுறை இடம்பெற்றதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

நேற்றிரவு 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சவ அறை பக்கம் உள்ள நுழைவாயிலுக்கு அருகில் பட்டா வாகனத்தில் வந்த சிலா் கதவால் ஏறி குதித்து மருத்துவமனையில் நுழைய முற்சித்துள்ளனா்.

இதனை அவதானித்த மருத்துவமனை பாதுகாப்பு உத்தியோகத்தர் அவா்களை தடுக்க முயன்றபோது மருத்துவமனை மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். அவா்கள் வந்த பட்டா வாகனத்திலிருந்து வாளை எடுத்து பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது வெட்ட முயற்சித்ததுள்ளனா். இதனையடுத்து சுதாகாித்துக் கொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் அவா்களை தடுக்க முயன்றுள்ளார்.

அங்கிருந்த கதிரை, மேசை போன்றவற்றை வாளால் வெட்டி சேதப்படுத்திய வன்முறை கும்பல் பின்னா் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடா்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

துரித விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் ஒருவரை கைது செய்தனர்.

ஏழாலையைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டார். ஏனையோரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்.