இந்தோனேசியாவில் கணவனை இழந்து குழந்தையுடன் நடுத்தெருவில் நிற்கும் யாழ் பெண் கீதா!

அவர்களின் பேஸ்புக் இருந்த பதிவினை அப்படியே நாம் இங்கு தந்துள்ளோம்.
வணக்கம் .

நான் கீதாபானு பிரணவன். எனது மகள் அஞ்சனா பிரணவன் (7 வயது). நாங்கள் 10 வருடங்களாக ஏதிலிகளாக, UNHCRல் அகதி அந்தஸ்து கொடுக்கப்பட்டு இந்தோனேசியாவில் வசித்து வருகிறோம்.
எனது கணவர் கடந்த வருடம் லங்ஸ் இன்பெக்சன் ஏற்பட்டு மூச்சு திணறல் உடன் ஹார்ட் அட்டாக்கும் வந்து யூலை மாதம் 8ம் திகதி இறந்தார். அதன் பின் நானும் மகளும் ஒரு பெண்கள் குழந்தைகள் காப்பத்தில் வசித்து வருகிறோம், இங்கு நாங்கள் மட்டும் தான் தமிழ். மற்றவர்கள் எல்லாம் வேறு நாட்டுப் பெண்கள்.

பேச்சுத் துணைக்குக் கூட யாரும் இல்லை. எப்ப என்ன பிரச்சனை வரும் என்று பயந்து கொண்டே வாழ்கிறோம்.

கணவர் இறந்த பின் நானும் மகளும் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறோம். எனக்கு அம்மா 2019ம், அப்பா என் கணவர் இறப்பதற்கு 2ம் மாதங்களிற்கு முன்னர் இறந்தனர். மாமனார், மாமியாரும் இல்லை. இந்த உலகில் எவ்வளவோ மனிதர்கள் இருந்தும் நாம் இருவரும் அனாதைகள் போலவே உணர்கிறோம்.

சாலைகளில் செல்லும் போதும் அவரின் நினைவுகள் எம்மைத் தாக்கி ரோட்டோரம் என்றும் பாராமல் அழுது திரிகிறோம். இப்போது மன அழுத்தம் மிகவும் அதிகமாகிறது. இந்த நாட்டிலிருக்கும் போது எமக்கு நரகத்தில் இருப்பதை போலவே உணர்கிறோம். எப்போதுமே தற்கொலை எண்ணத்துடனேயே இருக்கிறேன்.

எந்நேரத்திலும் நான் இறந்து விடுவேன் போலவே இருக்கிறேன். எனக்குப் பின் என் பிள்ளையின் நிலை என்ன எண்ணம் தான் என் உயிரை இழுத்துப் பிடித்து வைக்கிறது. ஒரு வேளை எனக்கு ஏதும் ஆகும் முன் என் பிள்ளையை ஒரு நல்ல இடத்தில் கரை சேர்க்க வேண்டுமே என்ற தவிப்பு தான் அதிகமாக இருக்கிறது.
என்னால் திரும்பி இலங்கைக்குச் செல்ல முடியாது.

10 வருடங்களாக இந்த அகதி வாழ்க்கையில் நிறைய கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். மற்றும் எனது கணவரையும் இங்கேயே இழந்து விட்டேன்.

எனக்கும், மகளுக்கும் இந்த நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு யாராவது உண்மையில் உதவி செய்வதாக இருந்தால் மெஸெஞ்சரில் தொடர்பு கொள்ளவும்.
நன்றி🙏 🙏