இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஈழத் தமிழர் பயங்கரவாத பிரிவினரால் கைது!

இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் பிரஜை ஒருவர், இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் போது கொழும்பு பண்டாரநாயக்கா விமான நிலையத்தில் இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் எனக் கூறப்படும் செல்லப்பாக்கியம் சுதாகரன் அண்மையில் விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

திருகோணமலையில் வசித்து வந்த சுதாகரன், 2018ஆம் ஆண்டு இந்தியா சென்றதாக கூறப்படும் நிலையில், அவர் எப்படி இந்தியா சென்றார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

எனினும், இந்தியாவில் தரையிறங்கியதும், இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள இலங்கையர்களுக்கான சிறப்பு அகதிகள் முகாமுக்கு அனுப்பப்பட்டார்.

ஐந்தாண்டு காலம் தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.மேலும் அவர் நாட்டிற்குள் காலடி எடுத்து வைத்தவுடன் இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

சித்திரவதைகள் தொடர்பான கொடூரமான விசாரணைகளுக்காக சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற 4வது மாடி என அழைக்கப்படும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (சிஐடி) அழைத்துச் செல்லப்பட்டதாக அவரது மூத்த சகோதரர் செல்லப்பாக்கியம் உலகேந்திரன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை அலுவலகத்தில் தெரிவித்தார்.

எனினும், அவர் கிருளப்பன் புடானி கட்டிடத்தில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் முன்னதாக படகு மூலம் இலங்கை செல்ல முயன்ற போது இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தங்க வைக்கப்பட்டார்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர், இரகசிய புலனாய்வாளரால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு திரும்பிய பின்னரும் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் வெளியாகவில்லை என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் தொன்மையானவை மற்றும் மிருகத்தனமானவை எனவும், கைதிகள் பல ஆண்டுகளாக விசாரணைக்கு உட்படுத்தப்படாமலும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படாமலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.