இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு!

இலங்கையின் ரூபாவின் மதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என கொழும்புப் பல்கலைக்கழக பொருளாதாரத் துறையின் முன்னாள் பீடாதிபதி மற்றும் இலங்கைப் பொருளாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் விஜிதபுரே விமலரதன தேரர் தெரிவித்துள்ளார்.

டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு அதிகரித்து செல்வதால் , வெளிநாடுகளில் இருந்து கொண்டு இலங்கைக்கு கொண்டு வரப்படும் பொருட்களின் விலை படிப்படியாக குறைய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு மற்றும் அதன் விளைவுகள் குறித்து பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செய்தியில் தேரர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில்

ரூபாயின் மதிப்பு கேள்வி மற்றும் விநியோகத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அண்மையில் காலமாக ரூபாயின் மதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

டொலர் கையிருப்பு அதிகரிப்பு, கிடைக்கவிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் மானியம், சுற்றுலா மற்றும் வெளிநாட்டு தொழிலாளர் வருமானம் ஆகியவை டொலர் பெறுமதி அதிகரிப்பை பாதித்துள்ளன.

இதன் காரணமாக யூக நோக்குடன் டொலர்களை சேமித்து கொண்டிருந்தவர்கள் தற்போது அந்தப் பணத்தை வெளியே கொண்டுவருகிறார்கள். அதனால் ரூபாவின் மதிப்பு மேலும் உயரலாம்.

டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு அதிகரித்து வருவதால், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் பொருட்களின் விலை படிப்படியாக குறைய வேண்டும்.

இது மக்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும். கடந்த காலங்களில் பெருமளவு இலாபம் பெற்று வந்த ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

இப்போது வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கூட தங்கள் பணத்தை இலங்கைக்கு அனுப்பத் தொடங்கியுள்ளனர். பணவீக்கமும் குறையத் தொடங்கியுள்ளது.

ஆனால் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் ஏதேனும் ஒரு வகையில் தளர்த்தப்பட்டால், இந்த ரூபாயின் மதிப்பு ஏதோ ஒரு வகையில் குறைவதைக் காணலாம். இருப்பினும், இந்த நிலைமை பொருளாதாரத்திற்கு ஒரு நல்ல அறிகுறியாகும்.

இருப்பினும், மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர, ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும். நாங்கள் இன்னும் கடனுக்காக காத்திருக்கிறோம். அப்போது நாங்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்காததால் இந்த நிலை ஏற்பட்டது.

சுதந்திரத்திற்குப் பிறகு, எங்களிடம் வலுலான பணமும் இல்லை, அந்நியச் செலாவணியும் இல்லை. அதிலிருந்து நாம் பாடம் கற்கவில்லை. எதிர்காலத்தில் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.

இது தொடர்பில் ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும். வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வர வேண்டும்.

நாம் கிராம மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.