மட்டக்களப்பில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்லும் நோக்கில் தங்கியிருந்த நபர்கள் கைது!

  மட்டக்களப்பில் கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்ரேலியா செல்வதற்காக வீடு ஒன்றில் தங்கியிருந்த 17 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு பிரதேசத்திணை சேர்ந்த 3 சிறுவர்கள் 5 பெண்கள் 8 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்துவந்த ஒருவர் உட்பட 17 பேரை நேற்று இரவு கைது செய்யபப்ட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்

பொலிசாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலின் அடிப்படையில்  மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு -கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள வீடு ஒன்றை சுற்றிவளைத்தனர்.

இதன் போது ஆள்கடத்தல் கும்பலை சேர்ந்த முல்லைத்தீவு பகுதியினை சேர்ந்த நபர் ஒருவர் 16 பேரிடம் பணத்தினை வாங்கி கொண்டு மட்டக்களப்பு கடல் ஊடாக அவுஸ்ரேலியா அனுப்புவதாக கூறி குறித்த நபர்களை அழைத்து வந்து மட்டக்களப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு வீடொன்றினை எடுத்து குறித்த நபர்களை ஒரு மாதகாலம் தங்க வைத்துள்ளமை பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் தெரிய வந்துள்ளது.

அவ்வாறு தங்கி இருந்தவர்களில் 3 சிறுவர்கள் 3 கர்ப்பிணி பெண்கள் உட்பட 5 பெண்கள் 8 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு வீடு வாடகைக்கு பெற்றுக் கொடுத்து உதவிபுரிந்துவந்த ஒருவர் உட்பட 15 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் படகு மூலம் செல்வதற்காக கொள்வனவு செய்யப்பட்டு வைத்திருந்த சமபோச பக்கற்கள், பிஸ்கற் பக்கற்கள் சீனி போன்ற பொருட்கள் மற்றும் ஆடைகளையும் பொலிசார் மீட்டுள்ளார்கள்.

இதனையடுத்து கைதானவர்கள் இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

அதேவேளை சட்டவிரோதமாக அவுஸ்திரேலாவிற்கு இலங்கையர்கள் எவரும் பிரவேசிக்க கூடாது என  இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் போல்ஸ்டீபன்ஸ் ( Paul Stephens) கடும் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.