இலங்கை தொடர்பில் மகிழ்வான செய்தியை வெளியிட்ட சர்வதேச நாணயநிதியம்

சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கான நிதி உதவிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, இலங்கைக்கான 2.9 பில்லியன் பிணை எடுப்பு கடனுதவி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் இன்று இடம்பெற்றது. இந்நிலையிலேயே இலங்கைக்கான பிணை எடுப்பு கடனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனை தனது டுவிட்டர் பதிவில் உறுதி செய்துள்ளார். இதற்கமைய எங்களிற்கான ஈ.எவ்.எவ். வை சர்வதேச நாணயநிதியம் அங்கீகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது நீண்ட பயணம், ஆனால் அனைவரினதும் கடினமான உழைப்பு அர்ப்பணிப்பு காரணமாக நாங்கள் சிறந்த நாட்களை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றோம் எனவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்த முக்கியமான நோக்கத்தை அடைவதற்கு பாடுபட்ட ஜனாதிபதிக்கும் இலங்கைக்கு கடன்வழங்கிய அனைவருக்கும் நன்றி என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விகர்மசிங்க நாளை (21) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.