இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளம் யுவதி குறித்து வெளியாகியுள்ள செய்தி!

இரத்தினபுரி பகுதியில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட   இளம் யுவதி மரணம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரத்தினபுரி, நிரியெல்ல பகுதியைச் சேர்ந்த சச்சினி ஜினாதாரி என்ற 25 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும் குறித்த யுவதி பணி நிமித்தமாக இரத்தினபுரிக்கு பேருந்தில் செல்வதற்காக காலை 06.30 க்கு வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த யுவதியின் காதலன் வழமைப்போன்று காலை அழைப்பினை மேற்கொண்ட போது தொலைப்பேசி இயங்காத காரணத்தினால் உடனடியாக யுவதியின் தாயாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பொலிஸார் வெளியிட்ட தகவல்

இதனை தொடர்ந்து நீண்ட நேர தேடுதலின் பின்னர் சச்சினி குறித்த தகவல் கிடைக்காததால், குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் பின்னர் யுவதி வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த யுவதி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்பதுடன் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்த மகளாவார்.

இரத்தினபுரி பதில் நீதவான் சுமித் ஆனந்தவினால் மரணம் தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக சடலம் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது கொலையாக இருக்கலாம் எனவும் கொலைக்கு முன்னர் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் யுவதியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி மற்றும் அலபாத்த பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.