தமிழர் மறுவாழ்வு முகாமில் கைதான இலங்கை இளைஞன்

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் – சத்தியமங்கலம் பவானிசாகரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஏராளமான இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

குறித்த முகாமில் வசிந்து வரும் 33 வயதுடைய இளைஞன் ஒருவருக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில் குறித்த இளைஞன் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல முயற்சி மேற்கொண்டார். இதற்காக ஆன்லைன் மூலம் கடவுச்சீட்டு எடுப்பதற்காக போலி முகவரியை கொடுத்து விண்ணப்பித்திருந்தார்.

இது தொடர்பாக பவானிசாகர் பொலிஸார் விசாரணை மேற்கொள்வதற்காக சம்பவ இடத்திற்கு வந்த போது தான் குறித்த இளைஞன் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பதும், அவர் இலங்கை தமிழர் எனவும் தெரியவந்தது.

இதனையடுத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் கடவுச்சீட்டு எடுப்பதற்கு அவர் முயற்சி செய்துள்ளார்.

இதற்காக ஓன்லைனில் விண்ணப்பித்த போது தனது முகவரிக்கு பதிலாக தனது நண்பரின் முகவரியை தனது முகவரியாக கொடுத்து ஏமாற்று வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் தனது ஆதார் அட்டையையும் அந்த விண்ணப்பத்தில் இணைத்து இருந்தார். இது குற்றம் என்று தெரிந்தும் இந்த செயலில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து கவுசிகனை பவானிசாகர் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.