வவுனியாவில் யானைக்கு வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி பலியான 22 வயது இளைஞன் !

வவுனியா வடக்கு – சின்னடம்பன் பகுதியில் யானைக்கு வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் (10.04.2023) இடம்பெற்ற இச்சம்பவத்தில், கனராயன்குளம் – குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய உலகநாதன் கஜந்தன் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் தொடர் யானைகள், பன்றிகளின் அச்சுறுத்தல் காரணமாக அங்குள்ள தோட்டக் காணி ஒன்றுக்கு யானை வேலி போடப்பட்டிருந்தது.

குறித்த வேலிக்கு மின்சாரம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அதனை அவதானிக்காது குறித்த வேலி ஊடாக நேற்றைய தினம் மாலை கஜந்தன் என்பவர் பயணித்துள்ளார்.

இதன்போது யானைக்கு வைத்த மின்சார வேலியில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.